மும்பை: இந்தியாவின் விமான நிலையம் ஒன்றில் விமானத்திற்குள் செல்வதற்காகத் தற்காலிகமாக எழுப்பப்படும் இணைப்பில் (ஏரோபிரிட்ஜ்) தானும் இதர பயணிகளும் பல மணிநேரம் சிக்கியிருந்ததாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
தான் பயணம் செய்யவிருந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்நிலை உருவானதாக அவர் கூறினார். இச்சம்பவம் சனிக்கிழமையன்று நிகழ்ந்ததாக ஆப்தே சொன்னார்.
காலை எட்டரை மணிக்குக் கிளம்பவேண்டிய விமானத்தில் 10.50 மணி ஆகியும் பயணிகள் நுழையவில்லை; அவர்கள் வெளியே செல்ல முடியாமல் விமான இணைப்பில் சிக்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் ஆப்தே இதனைத் தெரிவித்தார். மும்பையிலிருந்து புவனேஸ்வருக்குப் புறப்படவிருந்த அந்த விமானச் சேவை செயல்பாட்டுக் கோளாற்றால் தாமதமடைந்ததாக இண்டிகோ விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இணைப்பிலிருந்து சிறிது நேரம் வெளிவந்து அங்கு ஊழியராகப் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் பேசியபோது அவர் பிரச்சினையோ தாமதமோ ஏதும் இல்லை என்று சொன்னதாக ஆப்தே தெரிவித்தார். குறைந்தது பிற்பகல் 12 மணி வரை இணைப்பில் சிக்கியிருக்கவேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அருந்த நீரும் இல்லாமல் கழிவறையும் இல்லாமல் அவதிப்பட்டதாக ஆப்தே வருத்தம் தெரிவித்தார்.