புவனேஸ்வர்: அண்மையில் ஒடிசாவில் ஒரு வழக்கு விசாரணையின்போது, ஒடிசா உயர் நீதிமன்றம், அம்மாநில தலைமைச் செயலருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது.
அதில், உடற்கூராய்வு உள்ளிட்ட சட்டத்துக்குட்பட்ட மருத்துவ அறிக்கைகள், படிக்க முடியாத அளவுக்கு கையெழுத்து மிகவும் மோசமாக உள்ளன என்றும் இதனால், தவறாக புரிந்து கொள்ளும் அபாயமும் உள்ளது என்றும் அந்நீதிமன்றம் தெரிவித்தது.
அதனால் தெளிவான வகையில் எழுதும்படி மருத்துவர்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என அம்மாநிலத் தலைமைச் செயலருக்கு அது உத்தரவிட்டது.
இதையடுத்து, அம்மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் குமார் ஜெனா சனிக்கிழமை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு வழங்கும் மருத்துவக் குறிப்பு உள்ளிட்ட ஆவணங்களில் தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும். முடிந்தவரை அச்சடித்து வழங்கலாம். வழக்குகள் தொடர்பான மருத்துவ ஆவணங்கள் உட்பட, டாக்டர்கள் வழங்கும் அனைத்து ஆவணங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனக் குறிப்பிட்டிருந்தார்.