புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு 55 நாடுகளைச் சேர்ந்த நூறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 22ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க உள்நாடு, வெளிநாடு பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டு தூதர்கள் உட்பட 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உலக இந்து அறக்கட்டளை அமைப்பின் தலைவர் சுவாமி விக்யானந்த் தெரிவித்துள்ளார்.
“பிரபு ராம் வம்சத்தைச் சேர்ந்த கொரிய ராணிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களையும் அழைத்துள்ளோம்,” என்றார் அவர்.
வெளிநாட்டு தலைவர்கள் வரும் 20ஆம் தேதி லக்னோ நகருக்கு வரவிருக்கின்றனர். மறுநாள் 21ஆம் தேதி மாலை அவர்கள் அயோத்தி வந்து சேர்வர்.
“உலக நாடுகளின் தலைவர்கள் பலரையும் அழைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடம் சிறியதாக இருப்பதால் விருந்தினர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம்,” என்றும் சுவாமி விக்யானந்த் தெரிவித்தார்.

