லக்னோ: இந்தித் திரையுலக முன்னணி நட்சத்திரம் அமிதாப் பச்சன், ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள அயோத்தியில் 10,000 சதுர அடி நிலம் வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் மதிப்பு 14 கோடி ரூபாய் என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.
“என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ள நகரமான அயோத்தியில் அபிநந்தன் லோதா மாளிகையுடன் இந்தப் பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று நடிகர் அமிதாப்பை மேற்கோள்காட்டி நாளேடு தெரிவித்தது.
“அயோத்தியின் காலத்தால் அழியாத ஆன்மிகம் மற்றும் கலாசார செழுமை ஆகியவை புவியியல் எல்லைகளைத் தாண்டிய உணர்வுபூர்வமான தொடர்பை உருவாக்கியுள்ளன. இது அயோத்திக்கான இதயபூர்வமான பயணத்தின் தொடக்கமாகும். அங்கு பாரம்பரியமும் நவீனமும் தடையின்றி ஒருங்கிணைந்து என்னுடன் ஆழமாக எதிரொலிக்கும். உலகளாவிய ஆன்மிகத் தலைநகரில் எனது வீட்டைக் கட்ட ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
அயோத்தியின் சராயு பகுதியில் அமிதாப் வாங்கிய வீட்டு மனை அமைந்து இருக்கிறது. ராமர் கோயிலில் இருந்து வெறும் 15 நிமிட தொலைவிலும் விமான நிலையத்தில் இருந்து அரை மணி நேர தொலைவிலும் அமிதாப் பச்சன் வாங்கியிருக்கும் இடம் அமைந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த வீட்டு மேம்பாட்டு நிறுவனமான ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா நிறுவனம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகே 51 ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுடன் மிகப் பிரம்மாண்டமான வீடுகள் கட்டப்பட உள்ளன. வருகிற 2028ஆம் ஆண்டுக்குள் அவை கட்டி முடிக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.