புதுடில்லி: லோக்சபாவில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனது அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய வேண்டும் என அரசு எஸ்டேட் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மஹுவா மொய்த்ரா கிருஷ்ணா நகர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.,யாக இருந்தார்.
இவர், நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்தையும் பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து, நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்து மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. பின்னர் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், புதுடில்லியில் அரசு பங்களாவை காலிசெய்யக்கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றச் செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மஹுவா மொய்த்ரா தனது அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய வேண்டும் என அரசு எஸ்டேட் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.