பாட்னா: இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.
குறிப்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் குளிரால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த 2 நாள்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடும் குளிர் காரணமாக பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு வரும் 20ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

