சண்டிகர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியில் இணைந்துள்ளன.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மக்களவைத் தேர்தலில் அனைத்து 13 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பஞ்சாப்பில் அனைத்துத் தொகுதிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும் அதற்காக ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இண்டியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. இதில் சில கட்சிகள் சில தொகுதிகளைக் கேட்டுப் பிடிவாதம் பிடித்து வருகின்றன.
இந்நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவரான பகவந்த்மான், பஞ்சாப்பில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என அறிவித்திருப்பது இண்டியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
“பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சியை விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை 92 இடங்களில் மக்கள் வெற்றி பெறச் செய்தனர்,” என்று தெரிவித்தார். எனவே, மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவு ஆம்ஆத்மி கட்சிக்கே என்று பகவந்த் மான் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.