புதுடெல்லி: மேற்கு வங்காள மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தார்.
நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக இவர் மீது புகார் எழுந்தது.
இது குறித்து நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் புதுடெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய அவருக்கு மக்களவை செயலகம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து அரசு எஸ்டேட் இயக்குநரகமும் நோட்டீஸ் அனுப்பியது.
வீட்டை காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மொய்த்ரா தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா இன்று காலி செய்தார்.