லக்னோ: அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வழிபாடுகள் ஜனவரி 16ஆம் தேதியே தொடங்கி விட்டன.
இந்த நிலையில் உலகின் ஆகப்பெரிய பூட்டு, 1,265 கிலோ லட்டு பிரசாதம் ஆகியவை அயோத்தியை வந்து சேர்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ராமர் கோயிலின் திறப்பு விழாவுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நன்கொடைகளையும் பரிசுப்பொருள்களையும் அளித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், 400 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும் சாவி அலிகாரில் இருந்து அயோத்திக்கு வந்து சேர்ந்தன. இந்த பூட்டு இந்து மகா சபை சார்பில் அயோத்தி ராமர் கோயிலுக்குப் பரிசாக வழங்கப்பட்டது.
அலிகார் மாநிலம் நோரங்காபாத்தில் வசிக்கும் சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் அவரது மனைவி ருக்மணி ஷர்மா தம்பதியரால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூட்டு செய்யப்பட்டது. சத்ய பிரகாஷ் சர்மா அண்மையில் காலமானார்.
இந்தப் பூட்டை அயோத்தி ராமர் கோவிலுக்குப் பரிசளிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அந்தப் பூட்டு ராமர் கோயிலுக்குப் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராம் கேட்டரிங் சர்வீசஸ் மூலம் 1,265 கிலோ லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டது. கேட்டரிங் சேவையின் உரிமையாளரான நாகபூஷணம் ரெட்டி என்பவர் அந்த லட்டைப் பரிசாக அளித்துள்ளார்.

