புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் முதன் முறையாக ‘ஏர்பஸ் ஏ350’ விமானத்தை வாங்கியுள்ளது. அந்த விமானம் தனது சேவையைத் தொடங்கியுள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ் ஏ350 ரக விமானத்தை வாங்கி இருப்பதை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்தப் புதிய விமானம் முதலில் உள்நாட்டில் இயக்கப்படும் என்றும் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அனைத்துலக வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 25 புதிய விமானங்களை வாங்குவதற்கு ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த புதிய விமானங்களில் ‘ஏ350’ ரக விமானம் ஒன்று முதலில் டெல்லி வந்தடைந்துள்ளது. மேலும் நான்கு விமானங்கள் மார்ச் மாதம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதலாவது ஏர்பஸ் 350 விமானச் சேவையை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
மூன்று வகுப்புகளுடன் 316 இருக்கைகளைக் கொண்டுள்ள இந்த விமானத்தில், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இந்தப் புதிய விமானம் சிறந்த பயண அனுபவத்தைத் தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.