பிரம்மாண்ட வடிவமைப்பு, பிரத்யேகமான கலை நுணுக்கங்களுடன் எழுந்து நிற்கும் ராமர் கோயிலைக் கட்டுவதற்காக இந்தியாவிலிருந்தும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கோடி கோடியாக நன்கொடையளித்துள்ளனர்.
ராமர் கோயில் இயக்கத்தின் மூலம் நாடு முழுவதிலும் இருந்து நன்கொடை திரட்டும் பணியை 1980களில் இந்து அமைப்புகள் முன்னெடுத்தன. கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நிதி திரட்டப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 2019க்கு பின்னர் பெரிய அளவில் நன்கொடைகள் குவிந்தன.
சூரத்தை சேர்ந்த வைர வியாபாரிகளான திலிப் குமாரும் அவரது குடும்பத்தினரும் 101 கிலோ தங்கத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளனர். இதன் மதிப்பு 68 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தங்கம் கோயிலின் கதவுகள், கருவறை, தூண்கள், திரிசூலம், மேற்கூரை உள்ளிட்டவற்றை பயன்படுத்தப்பட்டது.
குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி கோவிந்த்பாய் தோலாகியா. 11 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
சமய குருவும் ராம காதை சொல்வதில் புதழ்பெற்றவருமான மொராரி பாபு என்ற ராம பக்தர் 18.6 கோடி ரூபாய் நிதி திரட்டி நன்கொடையாக அளித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த பக்தர்கள் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு நன்கொடை வழங்கியுள்ளனர்.
இந்திய அளவில் உள்ள கோயில்களும் நன்கொடை வழங்கியுள்ளன. அதில் முன்னணியில் இருப்பது பாட்னாவை சேர்ந்த மகாவீர் மந்தீர் ஆலயம். இது 10 கோடி ரூபாயை ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளித்துள்ளது.