திருமலை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா நேற்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
திறப்பு விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஏழுமலையானின் 1 லட்சம் லட்டு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி ஆலயம் செய்திருந்தது.
அயோத்தி சீதைக்கு ஆந்திராவின் நெசவுத் தொழிலாளரும் வியாபாரியுமான நாகராஜு என்பவர் ரூ.5 லட்சம் செலவில் 13 மொழிகளில் தயாரிக்கப்பட்ட பட்டுப்புடவையைக் காணிக்கையாக வழங்கி உள்ளார். பட்டுப்புடவையின் இருபுறமும் ராமாயணக் காட்சிகளும் காணப்படுகின்றன.
இதுகுறித்து நாகராஜூ கூறுகையில், “வால்மீகி மகாபாரதம் எழுதத் தொடங்கியது, தசரதர் யாகம் மேற்கொண்டது, ஸ்ரீ ராமரின் அவதாரம், அவரது கல்விப் பருவம், வில் பயிற்சி, சுயம்வரம், சீதாதேவியை மணம் முடித்தது, பட்டாபிஷேகம் உள்ளிட்ட ராமாயணப் படலம் முழுவதுமான ஏறக்குறைய 400 படங்கள் இந்தப் பட்டுப்புடவையின் இருபுறமும் நெய்யப்பட்டுள்ளது.
“அத்துடன், இந்தப் புடவை முழுவதும் இந்தியாவில் பேசப்படும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உருது உள்ளிட்ட 13 மொழிகளில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என எழுதப்பட்டுள்ளது. 60 மீட்டர் நீளம், 16 கிலோ எடையுடன் புடவை தயாராகி உள்ளது.
“ரூ.5 லட்சம் செலவில் இந்தப் புடவையைத் தயாரிக்க 7 மாத காலம் ஆனது. இந்தப் பட்டுச் சேலை அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும். இதனை ராமரின் சீதைக்காக ஆசை ஆசையாக தயாரித்து வழங்கியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.