அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீ ராமர் சிலையை அருண் யோகிராஜ் என்ற சிற்பி வடித்துள்ளார்.
“ஸ்ரீபாலராமா் சிலையை உருவாக்க, கடவுள் ராமா் என்னைத் தோ்ந்தெடுத்தாா். இதன்மூலம் உலகிலேயே சிறந்த அதிர்ஷ்டசாலியாக என்னை நான் உணர்கிறேன்,” என அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார்.
மைசூரு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவரான அருண் யோகிராஜ், தனியாா் நிறுவனம் ஒன்றில் மனித வளத் துறையில் பணியாற்றி வந்தாா்.
பின்னா், அந்தப் பணியைக் கைவிட்டவர் தனது குடும்பம் 5 தலைமுறையாக பின்பற்றி வரும் சிற்பத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்.
ராமர் சிலை உருவாக்கப் பணி குறித்து செய்தியாளா்களிடம் அருண் கூறுகையில், “மூலவா் ஸ்ரீபால ராமா் சிலையை உருவாக்க இரவு நேரங்களில் தூக்கத்தை மறந்து பணியாற்றி உள்ளேன். அதற்குரிய பலன் இப்போது கிட்டியுள்ளது. ராமரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. சில நேரங்களில் நான் கனவு உலகில் பறப்பது போல் உணர்கிறேன். இது என் வாழ்க்கையில் மிகப்பெரிய நாள்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
“சிற்பக் கலையைத் தந்தையிடமிருந்து கற்றேன். நான் உருவாக்கிய சிலையைப் பாா்த்தபோது அவா் மிகவும் பெருமையாக உணா்ந்திருப்பாா்,” எனவும் அருண் யோகிராஜ் மேலும் தெரிவித்தார்.
குழந்தை வடிவ ராமர் சிலையை மூன்று சிற்பிகள் வடிவமைத்து இருந்த நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த அருண் யோகிராஜ் வடிவமைத்த சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இவரைப் பற்றி மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “ராமர் எங்கே இருப்பாரோ அங்குதான் அனுமனும் இருப்பார். ராமரையும் அனுமனையும் பிரிக்கமுடியாது என்பதற்கு ஏற்றார்போல் அனுமனின் பூமியான கர்நாடகாவில் இருந்து குழந்தை ராமர் சிலை தேர்வானதில் மட்டற்ற மகிழ்ச்சி,” என்று கூறியிருந்தார்.