போபால்: இந்தியாவில் அழிந்துவிட்ட ‘சீட்டா’ எனப்படும் சிறுத்தைப் புலி இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளில் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
அந்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மற்றொரு சிறுத்தையும் இம்மாத தொடக்கத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சிறுத்தைப் புலி இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இந்தச் சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த 2022ல் நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள், 2023ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் என மொத்தம் 20 சிறுத்தைகள் இந்தியா கொண்டுவரப்பட்டன.
இந்த சிறுத்தைகள் மத்தியப்பிரதேச மாநிலம் குணோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. இதில், பல்வேறு காரணங்களால் ஏழு சிறுத்தைகள் உயிரிழந்தன. எஞ்சிய சிறுத்தைகளை பாதுகாக்கும் பணியில் பூங்கா அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.