கர்நாடகா: அயோத்தி பால ராமர் சிலைக்கு கல் தானம் அளித்த கர்நாடக விவசாயி, அக்கல்லை அயோத்திக்கு கொண்டு சேர்த்த குவாரி குத்தகைதாரர் இருவருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் திரு ராம் தாஸ். இவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த ஈராண்டுகளாக தனது நிலத்தை செம்மை செய்து விவசாயம் செய்ய முயற்சித்து வந்த இவருக்கு நிலத்தில் இருந்த கருங்கற்கள் இடையூறாக இருந்துள்ளன.
அப்பகுதியை சேந்த ஸ்ரீநிவாஸ் நடராஜ் என்ற குவாரி குத்தகைதாரரிடம் கற்களை அகற்ற அவர் கூறியுள்ளார். குவாரி குத்தகைதாரர் ஸ்ரீநிவாஸ்நடராஜ், ராமதாஸ் நிலத்திலிருந்து எடுத்த பெரிய கல்லை மூன்று துண்டுகளாக உடைத்தார். அதில் ஒரு துண்டு பால ராமர் சிலை செய்ய பயன்பட்டுள்ளது.
அந்த ராமர் சிலையைச் செதுக்கிய சிற்பியான கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ், மற்ற இரண்டு துண்டுகளையும் லக்ஷ்மணன், சத்துருகன் சிலைகளை செய்ய பயன்படுத்திக் கொள்வதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தனது 2.14 ஏக்கர் மொத்த நிலத்தையும் கர்நாடகாவில் ராமர் கோவில் எழுப்ப தானமாக அளிப்பதாக திரு ராம்தாஸ் அறிவித்துள்ளார்.
ஆனால் அவரும், குவாரி குத்தகைதாரர் ஸ்ரீநிவாஸ் நடராஜுப் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
ராமர் சிலை செய்த கல்லை தோண்டி எடுத்ததற்கு தனக்கு சட்ட விரோத சுரங்கப்பணி செய்ததாக ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டதாக குவாரி குத்தகைதாரர் ஸ்ரீநிவாஸ் நடராஜ் கூறியுள்ளார். அதேபோல் உடைக்கப்பட்ட மூன்று கற்களையும் அயோத்தி கொண்டுபோய் சேர்க்க தனக்கு ரூ.6 லட்சம் செலவானதாகவும், ஆனால் ராமர் கோவில் அறக்கட்டளையுடன் தொடர்புடைய ஸ்ரீநிவாஸ் தனக்கு வெறும் ரூ. ஒரு லட்சத்து 95 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.