பெங்களூரு: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் தனக்கு சொந்தமானது என்று ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா நீதிமன்றத்தை நாடி இருந்தார்.
இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
“நகைகளை ஏலம் விடாமல். தமிழக அரசின் உள்துறை மூலம் நகைகளைத் தமிழ்நாடு அரசுக்கு மாற்றுவது நல்லது என கருதுகிறேன்.
“அதன்படி, காவலர்களுடன் இணைந்து, திறமையானவர்களை நியமித்து நகைகளைப் பெற்றுச் செல்லுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறேன்,” என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை நடத்திய செலவுத் தொகை ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு வழங்குமாறும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

