தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதிசெய்ய கார்கே வலியுறுத்து

2 mins read
b00232a9-632c-42f1-8005-4dc5456c4dde
மல்லிகார்ஜுன கார்கே. - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி அசாமில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவரின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என காங்கிரசின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 14ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார்.

யாத்திரையின் 10வது நாளான நேற்று அசாமின் கவுஹாத்தி நகருக்கு அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். சுமார் 5,000க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் சென்றனர்.

அப்போது கவுஹாத்தி நகருக்குள் ராகுல் காந்தி நுழைவதற்கு அசாம் மாநில காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதன் காரணமாக காவல்துறையினருக்கும் காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். அது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “அசாம் மிகவும் அமைதியான மாநிலம். நக்சலைட் அணுகுமுறை எங்கள் கலாசாரத்துக்கு எதிரானது. ராகுல் காந்தி மக்களைத் தூண்டி விடுகிறார். வன்முறை தொடர்பான காணொளியை காங்கிரஸ் கட்சியினரே வெளியிட்டு உள்ளனர்.

“இந்தக் காணொளி ஆதாரத்தை வைத்து ராகுல் மீது வழக்குப் பதிவு செய்ய அசாம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். காங்கிரசாரின் வன்முறையால் கவுஹாத்தியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

கார்கே கடிதம்

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே எழுதியுள்ள கடிதத்தில், “அசாம் காவல்துறையினர் தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை பாஜக தொண்டர்கள் உடைத்து நெருங்க அனுமதிக்கின்றனர் அல்லது அத்து மீறல்களைக் கண்டு கொள்ளாமல் துணை நிற்கின்றனர். ராகுலுக்கும் அவருடைய குழுவினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர்.

“அசாமில் யாத்திரையின் முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் பல்வேறு இடையூறுகள் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் ராகுல் காந்தி திட்டமிட்டபடி யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

“அதனால் நீங்கள் தலையிட்டு அசாம் முதல்வரும், காவல்துறை டிஜிபியும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும்.

“ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து ராகுல் காந்திக்கு தனிப்பட்ட முறையில் பெரிய பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் இதில் தலையிட்டு அவருடைய யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ராகுல் காந்தி சற்று முன்னர் தனது 11வது நாள் யாத்திரையை தொடங்கினார். அசாமின் பார்பேட்டாவில் அவர் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார்.

ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு

நடைப்பயணத்தின்போது வன்முறையைத் தூண்டியதாக ராகுல்காந்தி மீது அசாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வன்முறையைத் தூண்டுதல், பொதுச்சொத்திற்கு சேதம் ஏற்படுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால், கட்சி தொண்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்