மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் அகமது நகர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று கரும்பு ஏற்றிவந்த கனரக வாகனம், கார் ஆகிய வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஒரு கனரக வாகனத்தில் இருந்து சில கரும்புக் கட்டுகளை இன்னொரு சிறிய வாகனத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த வேளையில் அவ்வழியே வந்த பேருந்து மோதியதில் அந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை பரபரப்பான மகாராஷ்டிராவின் தானே பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் தக்காளி ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து சாலையெங்கும் தக்காளி நசுங்கி சிவப்பாகக் காட்சி தந்தது.
அதையடுத்து அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் போக்குவரத்து முடங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த விபத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.14 மணிக்கு நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.