புவனேஸ்வர்: இந்தியாவிலேயே முதல்முறையாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, மருந்து, ரத்தம் ஆகியவற்றை பிற சுகாதார நிலையங்களுக்கு விரைவாக அனுப்பி வைக்க வசதியாக ஆளில்லா வானூர்தி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, ஆளில்லா வானூர்தியின் முதல் சேவையின் மூலம் கோர்தா மாவட்டத்தில் உள்ள டாங்கி சமுதாய சுகாதார நிலையத்துக்கு ரத்தம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டிலேயே முதல் முறையாக ஆளில்லா வானூர்தி மூலம் ரத்தம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆளில்லா வானூர்தி 60 கி.மீ. தூரத்தை 35 நிமிடங்களில் கடந்து ரத்தத்தை விநியோகம் செய்தது” எனத் தெரிவித்தது.
புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது அத்தியாவசியமான மருத்துவ பொருள்களை ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு விநியோகம் செய்வதில் ஆளில்லா வானூர்தியின் சேவை பெரிதும் உதவும்” என எய்ம்ஸ் செயல் இயக்குநர் அசுதோஷ் பிஸ்வாஸ் கூறினார்.