ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் யாதாத்ரி போங்கிர் மாவட்டம், எல்லங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் விட்டலாச்சார்யா குரெல்லா, 86.
இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், “இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெலுங்கானா மாநிலத்துக்கும் கிடைத்த பெருமை. மக்களின் வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுக்க விருது ஊக்கமளிக்கிறது,” என்றார்.
தெலுங்கு மொழி ஆசிரியராக தனது பணியைத் தொடங்கிய விட்டலாச்சார்யா, கல்லூரி முதல்வராக கடந்த 1993ல் ஓய்வு பெற்றார்.
தனது பணிக்காலத்தில் நிறைய புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்த இவர், 2014ல் எல்லங்கியில் உள்ள தனது வீட்டை நூலகமாக மாற்றினார்.
தற்போது இரண்டு தளமாக புதுப்பிக்கப்பட்டுள்ள இவரது வீட்டில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
மாநிலம் முழுவதிலும் இருந்து புத்தக விரும்பிகள், மாணவர்கள், ஆய்வாளர்கள் இந்த நூலகத்திற்கு வருகின்றனர்.
உஸ்மானியா பல்கலைக்கழகம், காக்காத்தியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் ஆய்வு மாணவர்களையும் இந்த நூலகம் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து குரெல்லா கூறுகையில், “எனது நூலகத்தில் சேகரித்த தகவல்கள் மூலம் எட்டு ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். எனது பணிகள் குறித்தும் சிலர் ஆய்வு செய்து வருகின்றனர்,” என்றார்.