புதுடெல்லி: மத்திய அரசு இந்தியாவில் பிச்சைக்காரர்கள் இல்லாத 30 நகரங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
வடக்கில் அயோத்தி, கிழக்கில் கவுகாத்தி, மேற்கில் திரையம்பகேஸ்வரர், தெற்கில் மதுரை என நாட்டில் 30 நகரங்கள் அதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற நகரங்களில் பிச்சையெடுக்கும் வயதானவர்கள், குழந்தைகள், மகளிர் ஆகியோருக்கு மறுநிவாரணம் வழங்கி, அவர்கள் கௌரவமாக வாழ்வதற்கு வழி வகுத்துக்கொடுப்பதன் சாத்தியக்கூறுகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
பெருநகரங்களில் பிச்சைக்காரர்கள் அதிகம் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, வரும் 2026ஆம் ஆண்டுக்குள் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரங்களாக அவற்றை மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த நகரங்களின் பட்டியலில் மேலும் பல நகரங்கள் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முதலில், நாட்டின் சமய ரீதியான, வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் பெற்ற நகரங்களைக் கருத்தில் கொண்டு முதல் கட்டமாக 30 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்காக செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தச் செயலி பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
தற்போது பட்டியலிடப்பட்டிருக்கும் 30 மாநகரங்களில், 24 நகரங்களிலிருந்து, திட்ட செயல்முறை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிச்சையெடுப்பவர்களின் வாழ்வாதாரத்தை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து ஆய்வறிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


