கோல்கத்தா: இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ல் பாஜக தலைமையிலான மத்திய அரசு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) கொண்டுவந்தது.
பங்ளாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக கடந்த 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியா வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், ஜெயினர்கள், பௌத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.
இந்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
ஆனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு சிஏஏ எனக் குறிப்பிடும் அச்சட்டத்தின் விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், மத்திய அரசின் துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சரான சாந்தனு தாக்கூர், “சிஏஏ விரைவில் அமல்படுத்தப்படும், இந்தச் சட்டம் இன்னும் ஏழு நாட்களுக்குள் செயல்படுத்தப்படும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்,” என்றார்.
செவ்வாய்க்கிழமை கோல்கத்தாவில் உள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிவழிக்கு பேட்டியளித்தபோது அவர் இந்த விவரத்தை வெளியிட்டார்
மேற்கு வங்காளத்தில் போங்கான் தொகுதி பாஜக எம்.பி.யாக சாந்தனு தாக்குர் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இவர், இத்தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மதுவா சமூகத்தின் தலைவர் ஆவார். இந்தச் சமூகத்தினர் பங்ளாதேஷ் நாட்டிலிருந்து மத துன்புறத்தல் காரணமாக 1950களில் இந்தியாவுக்கு வந்தவர்கள். இவர்கள் இந்தச் சட்டத்தால் பலன் அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குணால் கோஷ், “மேற்கு வங்காளத்தில் ‘சிஏஏ’அமல்படுத்தப்படுத்தப்படாது என எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி தெளிவாகக் கூறியுள்ளார்.
ஆனால், மக்களவை தேர்தலுக்கு முன் பாஜகவினர் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றனர்,” என்றார்.
இது தொடர்பாக முன்பு பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் குடியுரிமை விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் கோல்கத்தாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, “சிஏஏ இந்த மண்ணின் சட்டம். அதனை அமல்படுத்துவது தவிர்க்க முடியாதது. மக்களை மம்தா தவறாக வழிநடத்துகிறார்,” என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடைமுறைகளின்படி எந்தவொரு சட்டத்துக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த 6 மாதங்களுக்குள் அதற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால் சிஏஏ-வை பொறுத்தவரை இந்த காலக்கெடுவை மத்திய அரசு கடந்த 2020 முதல் தொடர்ந்து நீட்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.