மும்பை: அந்நியச் செலாவணியில் மின்னிலக்க நாணயம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஒருவர் தொலைபேசி வாயிலாக மும்பை தொழில் அதிபரிடம் கைப்பேசி மூலம் பேசியிருக்கிறார்.
அதை நம்பிய நவிமும்பை கலம்பொலி பகுதியைச் சேர்ந்த 59 வயது தொழில் அதிபர், அவ்வாறு முதலீடு செய்ய இணங்கி ரூ.65 லட்சத்தைக் கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் அந்தத் தொழில் அதிபர், முதலீடு செய்து சில நாட்களுக்குப் பின் முதலீட்டின் வழி கிடைத்த லாபம் குறித்துக் கேட்ட போது தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியவர்கள் சரியாகப் பதில் அளிக்கவில்லை.
தொழில் அதிபர் மீண்டும், மீண்டும் கேட்டதை அடுத்து அவர்கள் ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 878-ஐ திருப்பி கொடுத்தனர். அதன்பிறகு தொலைபேசியில் பேசியவரை தொழில் அதிபரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மேலும் அவர் மின்னிலக்கத்தில் முதலீடு செய்த பணத்தையும் திரும்பப் பெறமுடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழில் அதிபர், அந்த மோசடி குறித்து நவிமும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகார் தொடர்பாக காவல்துறையினர், ஐந்து பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.