புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், அவரது மகள் சுரண்யா டெல்லியின் ஜாங்புரா பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஜனவரி 20ஆம் தேதி சுரண்யா அய்யர் தனது முகநூல் பக்கத்தில், “ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்கவும் விரதம் மேற்கொள்கிறேன்,” என பதிவிட்டிருந்தார்.
ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டது. அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தப் பதிவு வெளியாகியது.
இந்நிலையில், ஜாங்புரா குடியிருப்போர் நலச்சங்கம் மணி சங்கர் அய்யர் மற்றும் சுரண்யா அய்யருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் “குடியிருப்பு வாசிகளின் மத உணர்வுகளுக்கு எதிராக அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒருவர் கருத்து தெரிவிப்பதை ஏற்க முடியாது.
“ராமர் கோயிலுக்கு எதிராக நீங்கள் செய்த செயல் சரிதான் என கருதினால். இந்தக் குடியிருப்பை காலி செய்துவிட்டு. இதுபோன்ற வெறுப்புப் பேச்சை சகித்துக்கொள்ளும் மக்கள் வசிக்கும் பகுதியாகப் பார்த்துக் குடியேறிக் கொள்ளுங்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு ராமர் கோயில் கட்டப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.