புதுடெல்லி: மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாட்டுப் பற்றுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல, ராணுவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக, பீகார் மாநிலத்தின் கதிகாரில் கடந்த புதன்கிழமை தனது இந்திய ஒற்றுமை நீதி நடைப் பயணத்தின் போது ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்களைச் சந்தித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அப்போது, “கடந்த 40-50 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் அதிகமாக இருந்ததால் நாட்டில் பரவலாக வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது,” என்று தெரிவித்தார். பீகாரில் இருந்து மேற்குவங்கம் திரும்பிய அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராணுவத்தில் இளைஞர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் திட்டமாகவே இது கொண்டுவரப்பட்டது. அதாவது அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணி செய்ய முடியும். அவர்களின் நான்கு ஆண்டு பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு சேவை நிதித் தொகுப்பு வழங்கப்படும்.
17.5 வயதில் இருந்து 23 வயதுக்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர முடியும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பீடு செய்யப்பட்டு தகுதி அடிப்படையில் 25 விழுக்காட்டினர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
‘அக்னிபாத்’ திட்டம் அறிமுகம் செய்யப்படுவதற்குமுன், பாதுகாப்புப் படையில் தோ்வு செய்யப்பட்டவா்களை நிரந்தரப் பணியில் நியமிக்கக் கோரி ஜனவரி 11ஆம் தேதி டெல்லி ஜந்தா் மந்தரில் ஏராளமான இளைஞா்களும் முன்னாள் ராணுவத்தினரும் மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.