கோல்கத்தா: 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்வதே கேள்விக்குறியாக உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, “மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சுமுகத் தீர்வு எட்டப்படும்,” என்று கூறியிருந்தார். இந்நிலையில் மம்தா இவ்வாறு பேசியுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி - காங்கிரஸ் மோதல் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது.
இது மறைமுகமாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான என்டிஏ கூட்டணியை வலுவானதாக முன்னிறுத்துவதாகக் கூறப்படுகிறது.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்மைய பேச்சு அவருடைய கட்சிக்கும் காங்கிரசுக்குமான பூசலை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் வகையில் அமைந்துள்ளது.
அவ்வாறு மம்தா ராகுல் காந்தியின் நீதி நடைப்பயணம் குறித்து பேசியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் மம்தா பானர்ஜி. அப்போது அவர், “இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மேற்குவங்கத்தின் 6 மாவட்டங்களைக் கடந்துள்ளது. அது வெறும் போட்டோ ஷூட் வாய்ப்பு. மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்தாள்வதற்காக வந்த புலம்பெயர் பறவைகள் என்றே அவர்களைச் சொல்லலாம்.
“தேர்தலில் காங்கிரஸ் 300 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால், அதற்கு செவிசாய்க்காத அவர்கள், மேற்குவங்கத்தில் முஸ்லிம் வாக்குகளைக் கவர்வதற்காக முயற்சி செய்து வருகின்றனர். இப்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது 2024 மக்களவைத் தேர்தலில் அவர்கள் 40 தொகுதிகளையாவது கைப்பற்றுவார்களா என்பதே கேள்விக்குறிதான்.
“நாங்கள் கூட்டணி என்பதைப் பற்றி திறந்த மனதோடு தான் அணுகுகிறோம். அவர்களுக்கு இரண்டு தொகுதிகள் தர முன்வந்தோம். ஆனால் அவர்கள் அதற்கு உடன்படவில்லை. இப்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக எங்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. நாங்கள் இனி மேற்குவங்கத்தில் தனியாகப் போட்டியிட்டு பாஜகவை வீழ்த்துவோம்” என்றார்.