கோட்டா(ஜார்க்கண்ட்): இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, “பாஜக வெறுப்பைப் பரப்பி வருகிறது. இந்த வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக நாங்கள் தொடங்கிய இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து வந்துள்ளது. வெறுப்புக்கு எதிராக அன்பின் கடைகளைத் திறப்போம் என்ற முழக்கத்தையே நாங்கள் கொடுத்து வருகிறோம்.
“பாஜகவினர் வெறுப்பையும் வன்முறையையும் எவ்வளவு பரப்பினாலும் நாங்கள் அதற்காக கவலைப்பட போவதில்லை.
“காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடு முழுவதும் அன்பின் கடைகளைத் திறப்போம். ஏனெனில், பாஜகவினரின் இதயத்தில் இருக்கும் வெறுப்புக்கும் அச்சத்துக்கும் எதிராக போராடுவதே எங்கள் கூட்டணியின் பணி.
“நாடு முழுவதும் உள்ள ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு எதிராக மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது.
“நாட்டில் அதானி என்று சொன்னாலே போதும், அடுத்த நொடியே மக்கள் புரிந்து கொள்வார்கள். அதானியின் முதலீடே நரேந்திர மோடிதான். நில தீர்ப்பாய மசோதாவை நாங்கள் கொண்டு வந்தோம். பிரதமர் நரேந்திர மோடி அதனை நீக்கிவிட்டார். ஒவ்வொருவருக்கு எதிராகவும் அநீதி இழைக்கப்படுகிறது. அதானியைத் தவிர மற்ற இந்தியர்கள் அனைவரும் அநீதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” எனத் தெரிவித்தார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீரின் ஸ்ரீநகர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த 2022-23-ல் மேற்கொண்ட ராகுல் காந்தி, அதன் இரண்டாம் கட்ட பயணமாக இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மணிப்பூரில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கினார். இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிய இந்த பயணம், 66 நாட்களில் 6,200 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து மும்பையில் முடிவடையும்.
இந்த நீதிப் பயணம் , மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.