மும்பை: நடிகை பூணம் பாண்டே கருப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்ட செய்தி அறிந்து இரங்கல் தெரிவித்து வந்த ரசிகர்களுக்கும் திரையுலகத்தினருக்கும் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
தான் உயிருடன் இருப்பதாக அந்த நடிகையே தெரிவித்துள்ளார்.
இந்தி, கன்னட, தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர், கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து, அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிப்ரவரி 2ஆம் தேதியன்று அதிர்ச்சி அறிவிப்பு ஒன்று வெளியானது. அதை அவரது ஊடக மேலாளரும் உறுதிப்படுத்தினார்.
பின்னர், அதே தளத்தில் பூணம் பாண்டே, “நான் இறக்கவில்லை...உயிரோடுதான் இருக்கிறேன். கருப்பை வாய்ப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படி செய்தேன்,” என்று காணொளி ஒன்றை பிப்ரவரி 3ஆம் தேதியன்று வெளியிட்டார்.
“இந்த நோயைச் சமாளிப்பது எப்படி என்று அறிந்திராத ஆயிரக்கணக்கான பெண்கள் உயிரிழக்கின்றனர். மற்றப் புற்றுநோய்கள் போல் அல்லாமல், கருப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தவிர்க்கக்கூடியது,” என அவர் காணொளிப் பதிவில் பகிர்ந்திருந்தார்.
‘கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு மரணம் வரட்டும்’ என்ற அவரது விழிப்புணர்வு இயக்கம், சமூக ஊடகவாசிகளின் கண்டனத்தைப் பெற்றது.
‘மரணம் உங்களுக்கு விளையாட்டாகிவிட்டதா?’, ‘வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே?’ என்றெல்லாம் இணையவாசிகள் வினவத் தொடங்கிவிட்டனர்.
மற்றொரு காணொளிப் பதிவில், தனது பொய்யான மரண அறிவிப்புக்கு நடிகை மன்னிப்பு கோரியபோதும் அதிகம் பேசப்படாத கருப்பை வாய்ப் புற்றுநோய் பற்றி அனைவரும் அறிந்திருத்தல் வேண்டும் என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார்.