ஹைதராபாத்: தெலுங்கானாவின் குற்றவியல் புலனாய்வுத் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 95 போலிக் கடப்பிதழ்கள் இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறி ஒருவரிடம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
போலிக் கடப்பிதழ் தயாரித்து விற்பனை செய்துவரும் கும்பலுக்கு தலைவராகச் செயல்படுவதாக நம்பப்படும் 50 வயது அப்டுஸ் சட்டார் ஒஸ்மான் அல் ஜவாரியைத் தேடும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியது.
அப்போது இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறி ஒருவருக்கு 95 போலிக் கடப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்ததை காவல்துறை கண்டுபிடித்தது. இதில் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக தெலுங்கானா குற்றவியல் புலனாய்வுத் துறை ஹைதராபாத், ஜக்தியல், நிஸாமாபாத், கொருட்லா, கரிம்நகர் ஆகிய இடங்களில் போலிக் கடப்பிதழ் தயாரிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து அதிரடிச் சோதனை மேற்கொண்டது. அப்போது சந்தேகத்தின்பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
அண்மையில் நடந்த இன்னொரு சோதனையில் கடப்பிதழ் சேவை நிலையத்தின் உதவியாளர் பிரணாப் என்பவரும் நிஸாமாபாத் காவல்துறையின் சிறப்புப் பிரிவின் உதவி ஆய்வாளர் லக்ஸ்மண் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போலிக் கடப்பிதழ் குறித்து விழிப்பாக இருக்குமாறு குடிநுழைவுத்துறை அலுவலகங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.