பந்திப்பூர்: இந்தியாவின் பந்திப்பூர் தேசியப் பூங்காவில் அண்மையில் காட்டு யானை ஒன்றுடன் ‘செல்ஃபி’ படமெடுக்க முயன்ற ஆடவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திராத அனுபவத்தைப் பெற்றனர்.
அந்த யானை அவர்களைத் துரத்தத் தொடங்கியதும் ஓடிய அவர்கள், யானை அதன் முடிவை மாற்றிக்கொண்டதால் நூலிழையில் உயிர்தப்பினர்.
ஜனவரி 31ஆம் தேதி, கத்தாரில் மென்பொருள் பொறியாளராக வேலைபார்க்கும் கேரள மாநில ஆடவரான சாவத், தன் குடும்பத்தினருடன் ஊட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது யானை ஒன்று பயணிகளைத் துரத்துவதைக் கண்ட சாவத், அதனைக் காணொளியாகப் பதிவுசெய்தார்.
அந்தக் காணொளியில் நெடுஞ்சாலையில் மிகப் பெரிய யானை ஒன்று ஆடவர்கள் இருவரைத் துரத்துவதைக் காண முடிகிறது.
காருக்குத் திரும்ப இயலாத இருவரும் யானையிடமிருந்து தப்பிக்க ஓடுவதையும் அருகிலேயே கார் ஒன்று நகர்வதையும் அதில் பார்க்க முடிகிறது.
ஆடவர்களில் ஒருவர் தரையில் விழுந்தார். கண நேரத்திற்கு அசையாமலிருந்த யானை, அவரைத் தாக்க முயன்றது. பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்று மறைந்தது.
இணையத்தில் பரவிய இந்தக் காணொளியைப் பார்த்த பலரும் வழிகாட்டிக் குறிப்புகளை மதித்து நடக்காதது குறித்து அந்த ஆடவர்களைக் கண்டித்துள்ளனர்.