அயோத்தி: அண்மையில் குடமுழுக்கு கண்ட அயோத்தி ஸ்ரீராமர் கோயிலைக் காண வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக அயோத்தி மாறி இருக்கிறது.
இதனையடுத்து அயோத்தி நகரின் சுற்றுலாத் திறனை அதிகரிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு உரிய வசதிகளை வழங்கவும் விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன. இந்நிலையில், அயோத்தியில் புதிய உல்லாச விடுதி கட்டுவதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றை உத்தரப் பிரதேச மாநில அரசு தேர்வு செய்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அம்மாநில சுற்றுலா இயக்குநர் பிரகர் மிஸ்ரா முன்னிலையில் அயோத்தியில் 100 அறைகள் கொண்ட உல்லாச விடுதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறைக்கும் அமெரிக்க நிறுவனமான ‘எம்/எஸ் அஞ்சலி இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி’க்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.