புதுடெல்லி: மானிய விலை அரிசியான ‘பாரத் அரிசி’ வரும் 9ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்தது.
ஒரு கிலோ பாரத் அரிசி ரூ.29க்கு விற்பனை செய்யப்படும் என அது மேலும் கூறியது.
இதுதொடர்பாக மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு வகையான அரிசிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. எனினும், அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அது 15 விழுக்காடு அதிகரித்துள்ளது.
“இந்நிலையில், அரிசியின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் விற்பனை நிலையங்கள் (கேந்திரிய பந்தர்) மூலம் சில்லறை சந்தையில் மானிய விலையில் பாரத் அரிசியை ஒரு கிலோ ரூ.29-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.
முதற்கட்டமாக சில்லறைச் சந்தை விற்பனைக்கு 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் 5 கிலோ, 10 கிலோ பைகளில் இது கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
பாரத் அரிசி இணைய வழியிலும் விற்பனை செய்யப்பட உள்ளது என்றும் அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரிசி கையிருப்பு குறித்த தகவல்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய உணவுத் துறை அமைச்சின் வலைதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு மத்திய அமைச்சு உத்தரவிட்டுள்ளது.