புதுடெல்லி: இந்திய துணை ராணுவப் படைகளில் 41,606 பெண்கள் பணியாற்றி வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், பல்வேறு துணை ராணுவப் படைகளில் பெண்களை பணியமர்த்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு உடல்தர தேர்விலும் உடல்திறன் தேர்விலும் தளர்வுகள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் அச்சு, மின்னணு ஊடகம் வழியே பல்வேறு விளம்பரங்கள் அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கர்ப்ப கால விடுமுறை, குழந்தைப் பராமரிப்பு விடுமுறை ஆகியவை துணை ராணுவப் படையில் உள்ள பெண்களுக்கும் வழங்கப்படுவதாக இணை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


