இம்பால்: மணிப்பூர் மாநிலத்தை ஒட்டிய மியன்மார் எல்லையில் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு ஏற்கெனவே வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையாக வேலி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை மணிப்பூரில் வாழும் மேத்தி இனக் குழுக்கள் வரவேற்றுள்ளன. இந்த வேலி அமைப்பது குறித்து மேத்தி இன மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே சமயம் அங்கு வாழும் குகி மற்றும் நாகா இனக் குழுக்கள் மியன்மார் எல்லையில் வேலி அமைக்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மியன்மார் நாட்டுடன் 398 கி.மீ. எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மணிப்பூரில் கடந்தாண்டு இனக்கலவரம் வெடித்தது. மியன்மாரில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்த போதைப்பொருள் வியாபாரிகளால் வன்முறை தூண்டப்பட்டதாக மணிப்பூர் அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்தப் பிரச்சினைகளையும் முன்னிறுத்தி இந்திய-மியன்மார் எல்லையில் வேலி அமைக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்த நிலையில் மியன்மாரை ஒட்டிய எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதன்கிழமை அறிவித்தார்.