புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது. தேர்தலையொட்டி கூட்டணியை இறுதி செய்வதற்கு கட்சிகள் மும்முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சி தென்னிந்திய மாநிலங்களைப் போல் எங்கெல்லாம் வலுவில்லாமல் இருக்கின்றதோ அந்த மாநிலங்களில் அது முக்கிய கட்சிகளைக் கூட்டணி சேர்க்கும் வேலையில் இறங்கியுள்ளது. அவ்வகையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தைத் தனது கூட்டணியில் இணைத்துள்ளது பாஜக.
இப்போது ஆந்திராவில் தனது கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக தலைவர்கள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடுவை வியாழக்கிழமை பாஜகவின் அமித்ஷா சந்தித்துப் பேசியுள்ளார்.
அமித்ஷாவை அவரது இல்லத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டாவும் உடனிருந்ததாகக் கூறப்படுகிறது.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் இருந்தது. அந்த தேர்தலில் தெலுங்குதேசம் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க. மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தன.
பின்னர் பா.ஜ.க.வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனையடுத்து 2019ஆம் ஆண்டு தேர்தலில் தெலுங்குதேசம் தனித்துப் பேட்டியிட்டு படுதோல்வியடைந்து ஜெகன் மோகன் ரெட்டியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.
2024 மக்களவைத் தேர்தலில் தெலுங்குதேசம், ஜனசேனா, பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடு- அமித்ஷா சந்திப்பு நடந்துள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில் தெலுங்கு தேசத்துடன் தேர்தல் கூட்டணியை உறுதி செய்ய பாஜக இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளத்துடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.