கோர்பா: தனது மகளின் திருமண விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு இனிப்புகளுடன் தலைக்கவசத்தை அன்பளிப்பாக வழங்கி விழிப்புணர்வூட்டி உள்ளார் பெண்ணின் தந்தை.
“உயிர் என்பது விலைமதிப்பற்றது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி உயிருக்கு உலை வைக்கவேண்டாம்,” என்றும் அவர் விருந்தினர்களைக் கேட்டுக்கொண்டார்.
பொதுவாக திருமண விழாக்களில் பங்கேற்பவர்களுக்கு திருமண வீட்டார், விருந்தளித்து தாம்பூலப் பைகள் கொடுப்பது வழக்கம்.
இதுபோல், சத்தீஷ்கர் மாநிலம், கோர்பா நகரைச் சேர்ந்த சேத் யாதவ் என்பவரும் தன் மகளின் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு தலைக்கவசங்களை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்.
இதுகுறித்து சேத் யாதவ் கூறுகையில், “என் மகளின் திருமணம், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறந்த நிகழ்வாக அமைய வேண்டும் என ஆசைப்பட்டேன்.
“இதைத்தொடர்ந்து, குடும்பத்தினர் 12 பேர் ஒன்றாகச் சேர்ந்து தலைக்கவசம் அணிந்தபடி நடனமாடினோம்.
“மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விலைமதிப்பற்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்க வேண்டாம் என விருந்தினர்களிடம் கேட்டுக்கொண்டேன்.
“விருந்தினர்களுக்கு இனிப்புகளோடு தலைக்கவசத்தையும் சேர்த்து தாம்பூலப் பையாக வழங்கினேன்,” என்றார்.