புதுடெல்லி: இந்தியா மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகும் இத்தருணத்தில் கடந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்தான தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சியின் வசம் தேர்தலுக்கான பத்திரங்கள் மூலம் ரூ.1,300 கோடி குவிந்தது எனவும் இத்தொகை காங்கிரஸ் கட்சி பெற்ற தொகையைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு பல பக்கங்களில் இருந்தும் நன்கொடைகள் குவிந்து வருகின்றன.
ஆளும்கட்சியான பாஜக இதில் முன்னிலை வகித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் அக்கட்சி நன்கொடையாக பெற்ற மொத்த நிதி ரூ.2,120 கோடி. இதில் ரூ.1,300 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலமாக சேர்ந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சி பெற்ற ரூ.171 கோடியுடன் ஒப்பிடுகையில் 7 மடங்கை விடவும் சற்று அதிகம். இதற்கு முந்தைய நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.236 கோடி பெற்றதைவிடவும் இது குறைவாகும்.
தற்போது அடுத்த பொதுத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருவதால், கடந்தாண்டை விடவும் இந்த நிதியாண்டில் அதிக அளவில் நன்கொடைகளை கட்சிகள் ஈர்க்கும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் ஆளுங்கட்சியான பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், அதற்கான நன்கொடைகள் உச்சம் தொடும் எனவும் கணிப்புகள் புலப்படுத்தி உள்ளன.