புதுடெல்லி: வயதான தம்பதி கூடுதலாக பணம் செலுத்தி முன்பதிவு செய்த இருக்கையை அவர்களுக்குத் தர மறுத்த ஏர் இந்தியா நிறுவனம் ரூ.48,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என லோக் அதாலத் உத்தரவிட்டுள்ளது.
சுனில் பார்தியும் அவரது மனைவியும் டெல்லியில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு செல்வதற்காக இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்துள்ளனர். வயதானவர்கள் என்பதால் கால்நீட்ட வசதியாக உள்ள இருக்கைக்கு கூடுதலாக ரூ.18,000 அவர்கள் செலுத்தியுள்ளனர்.
ஜூன் 22, 2022ஆம் ஆண்டு பயணம் செய்ய ஜூன் 6, 2022 அன்று தம்பதி முன்பதிவு செய்தனர்.
பயணத்தின்போது அந்த வயதான தம்பதியினருக்கு முன்பதிவு செய்திருந்த இருக்கைகளுக்கு பதிலாக வேறு இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. இதுகுறித்து தம்பதி விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டபோது ஊழியர்கள் கோபமாக நடந்து கொண்டார்கள். பின்னர் தம்பதி முன்பதிவு செய்த இருக்கைகள் ‘விஐபி’க்களுக்கு ஒதுக்கப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த லோக் அதாலத் தலைவர் எஸ்.கே. சச்தேவா, “பணத்தை வசூலித்த பிறகு இருக்கைகளை சரிபார்த்து வழங்குவது ஏர் இந்தியா நிறுவனத்தின் கடமை. இதில், அப்பாவி பயணிகளிடம் எந்த தவறையும் கண்டுபிடிக்க முடியாது. அப்படி இருந்தும் அவர்கள் 15 மணி நேரம் அசெளகரியமான பயணத்தை அனுபவித்துள்ளனர். எனவே, அவர்களுக்கு ஏர் இந்தியா ரூ.48,000 இழப்பீடாக வழங்க வேண்டும்,” என்று உத்தரவிட்டார்.