இந்தியாவிலுள்ள ஒரு தந்தைக்கு ஜனவரி மாதம் தெரியாத வெளிநாட்டு எண்ணிலிருந்து அழைப்பு வந்தபோது, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்தப்பட்ட மோசடி வலையில் விழுவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்ட மோசடிக்காரர், திரு ஹிமான்ஷு சேகர் சிங்கிடம் அவரது 18 வயது மகன் கற்பழிப்பு கும்பலுடன் பிடிபட்டதாகவும் ரூ. 30,000 (s $486) கொடுத்தால் மகனின் பெயரை அகற்ற முடியும் என்றும் கூறினார் என்று இந்திய ஊடகங்கள் பிப்ரவரி 12ஆம் தேதி செய்தி வெளியிட்டன.
ஜனவரி 8ஆம் தேதி நடந்த அச்சம்பவம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய திரு சிங், “அடுத்த நிமிடம், ‘அப்பா தயவு செய்து அவருக்குப் பணம் கொடுங்கள், அவர்கள் உண்மையான போலிஸ்காரர்கள், தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று ஒரு குரல் கேட்டது. அது என் மகன் அல்ல என்று ஒரு கணம் கூட எனக்கு சந்தேகம் எழவில்லை. பேசும் பாணி, அழும் பாணி... எல்லாமே ஒரே மாதிரிதான் இருந்தது.”
சந்தேகம் ஏற்பட்டநிலையில், அழைத்தவர் ஒரு கடத்தல்காரன் என்று அஞ்சிய அவர், முதலில் ரூ. 10,000 (162 சிங்கப்பூர் டாலர்) செலுத்தினார்.
பின்னர் மகனைத் தேட முடிவு செய்தார். அவரது பதின்மவயது மகன், கல்வி நிலையம் ஒன்றில் தேர்வு எழுதிக்கொண்டிருப்பது தெரியவந்தது.
அண்மைய வாரங்களில், மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தைகளின் குரல் போல் போலி குரல் பதிவுகளை உருவாக்கி, பெற்றோர்களை ஏமாற்றி பணம் பறித்த மூன்று முக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.
மற்றொரு சம்பவத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ஒரு தாய்க்கு மோசடி அழைப்பு வந்தது. மோசடிக்காரர்கள் அவரது மகனின் குரலில் பேச தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர்.
அதிர்ஷ்டவசமாக, அழைப்பு வந்தபோது அவரது மகன் அவருக்கு எதிரே அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
ஒருவரது குரலின் உண்மையான பதிவைப் பயன்படுத்தி, அதேபோன்ற போலி குரல் பதிவுகளை உருவாக்க முடியும்.
இதுபோன்ற குரல் நகலெடுப்பு சம்பவங்கள் உலகின் பிற பகுதிகளில் நடந்துள்ளன.