மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் காங்கிரசிலிருந்து விலகல்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் காங்கிரசிலிருந்து விலகல்

1 mins read
59ab06eb-4419-4365-9199-ad53511b2eb7
அசோக் சவான் - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து திங்கட்கிழமை விலகியுள்ளார். அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்தவர். காங்கிரசில் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்தவர்.

இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தலும் வரும் அக்டோபருக்குள் மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், அசோக் சவானின் இந்த விலகல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அசோக் சவானோடு, அவரது ஆதரவு எம்எல்ஏக்களான சுபாஷ் தோட்டி, ஜித்தேஷ் அந்தர்புர்கர், அமர் ராஜூர்கர் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ், “எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைய விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் எங்களோடு தொடர்பில் இருக்கின்றனர். ஏனெனில், அவர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள்” என்றார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியோரா அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியிலும், பாபா சித்திக்கி, அஜித் பவாரின் கட்சியிலும் இணைந்தனர்.

குறிப்புச் சொற்கள்