முன்னேறிய விவசாயிகள் பேரணி; கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

முன்னேறிய விவசாயிகள் பேரணி; கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

2 mins read
விவசாயிகள் போராட்டம் எதிரொலி: டெல்லியில் போக்குவரத்து நெரிசல்; பதற்றம்
5a39b5a6-c090-426b-85fa-387431569207
விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை காவலர்கள் வீசியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: அனைத்துவிதமான விவசாய விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ என்ற மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடத்தினர்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் கலந்துகொள்ள பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்கள், லாரிகளில் வரிசைகட்டி வந்தனர்.

இப்போராட்டத்தைக் கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது காவலர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். அதையும் பொருட்படுத்தாமல விவசாயிகள் பேரணியாக முன்னேறிச் சென்றனர்.

இதனால், டெல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரமாக கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் விரைந்து செல்லமுடியாமல் ஊர்ந்து சென்றன. நகரின் முக்கிய பாதைகள் மாற்றி விடப்பட்டதால் , வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஹரியானா- பஞ்சாப் எல்லையான ஷம்பு என்ற பகுதியில் வாகனங்களைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால், விவசாயிகள் தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு முன்னேறிச்செல்ல முயன்றதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து ஹரியானா காவலர்கள் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசினர்.

இந்த தாக்குதல்களையும் எதிர்கொண்டபடி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

டெல்லியில் வரும் மார்ச் 12ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் ஏதும் அசம்பாவிதத்தில் ஈடுபடாமல் இருக்க ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றித் தரும்படி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தைத் துவக்கினர்.

விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றுதல், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என 200 விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

கார்கே குற்றச்சாட்டு

விவசாயிகளின் போராட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது. தலைநகருக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

“முள்வேலி, ஆளில்லா வானூர்திகள் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசுதல், சாலைகளில் தடுப்புகளை வைப்பது, ஆணிகளைக் கொட்டுவது என டெல்லி எல்லைக்குள் விவசாயிகளை வரமுடியாதபடி காவல்துறையினர் தடுக்கப் பார்த்தனர். மோடி அரசு விவசாயிகளின் குரலை நசுக்கியுள்ளது.

“இப்போது 62 கோடி விவசாயிகளும் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. சத்தீஸ்கர் மாநிலம், அம்பிகாபூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்காக அவர்களது நீதிக்கான குரலை காங்கிரஸ் எழுப்பும். நாங்கள் பயப்பட மாட்டோம், தலைவணங்க மாட்டோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்