புதுடெல்லி: 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆயத்தமாக உள்ளதென்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்து உள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா ஏற்று நடத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அவர் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 13) விளக்கினார்.
“2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா தயாராக வேண்டிய அவசியம் உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வது என்பது மிகப்பெரிய செயல். அதற்கு இந்தியா தயாராக உள்ளது.
“போட்டிகளை நடத்துவதற்கான விண்ணப்ப நடைமுறை தொடங்கும் எல்லா சமயங்களிலும் இந்தியா உறுதியாக அதற்கு விண்ணப்பிக்கும்.
“அந்தப் போட்டிகளை முழு ஆற்றலுடன் இந்தியா ஏற்று நடத்தும்,” என்றார் அனுராக் தாக்கூர்.
இந்தியா இதுவரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்துலக ஒலிம்பிக் குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
அதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா ஏற்று நடத்துவது தொடர்பான விருப்பத்தை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் இந்தியாவில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
2024 ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் பாரிசில் நடைபெற உள்ளன.