புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், வரும் கல்வியாண்டில் இருந்து ‘ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை’ அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கு ‘அபார்’ அட்டை என்று பெயரிடப்பட்டு உள்ளது.
ஜூன் மாதம் தொடங்க உள்ள கல்வியாண்டில் இந்த அடையாள அட்டை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், 25 கோடி அபார் அட்டை உருவாக்கப்பட்டதைக் குறிக்கும் வண்ணம் தேசிய கூட்டம் ஒன்றை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 13) தொடங்கி வைத்தார்.
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும். மாணவர்களின் முன்னேற்றம், செயல்பாடுகளைக் கண்காணிக்க அபார் அடையாள எண் வழங்கப்படும்.
மாணவர்கள் எங்கே படிக்கிறார்கள், கல்லூரி செல்கிறார்களா அல்லது படிப்பை பாதியில் நிறுத்துகிறார்களா போன்றவற்றை இதன் மூலம் கண்காணிக்க முடியும்.
மாணவர்களுக்கான கல்விக் கடனுக்கும் அபார் அட்டை தேவைப்படும்.

