டெராடூன்: தமது மனைவியின் காதலரைக் கொன்று, அந்த ஆடவர் கலவரத்தில் இறந்ததைப் போல் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி காட்டியதாகத் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 8ஆம் தேதி நிகழ்ந்த ஹல்ட்வானி கலவரத்தில் 25 வயது பிரகாஷ் குமார் மாண்டதாக முதலில் நம்பப்பட்டது.
ஆனால் அவரைக் காவல்துறை அதிகாரி பிரேந்திர சிங் கொன்று அவரது உடலை கலவரம் நிகழ்ந்த இடத்தில் போட்டுவிட்டுச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேந்திர சிங்கின் மனைவியுடன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் கள்ள உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்பெண்ணுடன் இருந்தபோது காணொளி எடுத்து அதைப் பயன்படுத்தி அவரை மிரட்டி பிரகாஷ் குமார் பணம் பறித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொலையில் பிரேந்திர சிங்கின் மனைவி பிரயங்கா, மைத்துனர் பெயின் ஆகியோருடன் பிரேம் சிங், நயிம் கான் ஆகியோருக்கும் பங்கு இருப்பதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரியங்கா தப்பி ஓடிவிட்டதாகவும் அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.