புதுடெல்லி: இந்தியாவில் உள்ளவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களை (என்ஆர்.ஐ) திருமணம் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய குடிமக்களை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்வதற்கான விதிகளை கடுமையாக்குமாறு மத்திய சட்ட அமைச்சுக்கு சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சுக்கு நீதிபதி ரித்து ராஜ் தலைமையிலான சட்ட கமிஷன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
“இந்திய குடிமக்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்து, மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இத்தகைய மோசடிகளால் பெண்கள் ஆபத்தான சூழலுக்கு தள்ளப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் உள்ள இந்திய வம்சாவளிகள் ஆகியோருடனான இந்திய குடிமக்களின் திருமணங்கள் இந்தியாவில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
மேலும் விவாகரத்து, துணையைப் பராமரிப்பது, குழந்தைகளை பராமரிப்பது, நிர்வகிப்பது, அழைப்பாணை, நீதித்துறை ஆவணங்கள் அனுப்புவது தொடர்பாக புதிய சட்டத்தில் விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
திருமணமான தம்பதியரின் கடவுச்சீட்டுகளில் அவர்களின் திருமணப் பதிவு எண்ணை குறிப்பிடுவதற்கு கடவுச்சீட்டு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்.
திருமணங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உள்ளூர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

