லக்னோ: உத்தரப்பிரதேச மாநில அரசு ரூ.10 லட்சம் கோடி மதிப்புள்ள தொழில் முதலீடுகளை ஒரே நேரத்தில் இம்மாநிலத்தில் தொடங்க தீர்மானித்துள்ளது. இதற்கான விழா திங்கட்கிழமை உத்தரப்பிரதேசத்தில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு 14 ஆயிரம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைத்தும் உரையாற்றினார்.
இந்த 14 ஆயிரம் திட்டப் பணிகள் ரூ.10 லட்சம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
முன்னதாக விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, முதலில் சம்பல் நகருக்கு சென்று ஸ்ரீகல்கி ஆலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
பிரமோத் கிருஷ்ணன் என்பவர் அமைத்துள்ள அறக்கட்டளை சார்பில் இந்த ஆலயம் கட்டப்பட உள்ளது.
கல்கி ஆலய அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பிறகு பிரதமர் மோடி தலைநகர் லக்னோவுக்கு வந்தார். அங்கு நடந்த விழாவில் 14 ஆயிரம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த 14 ஆயிரம் திட்டங்களில் 60 திட்டங்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தது.
இதன்மூலம் உத்தரப்பிரதேசத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்துக்கு மட்டும் ரூ.62,000 கோடியை உத்தரப்பிரதேச அரசு முதலீடுகளாக ஈர்த்துள்ளது.
அயோத்தி நகரை மேலும் மேம்படுத்த ரூ.10,155 கோடிக்கான திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்.
மோடியின் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் ரூ.15 ஆயிரத்து 313 கோடிக்கு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.