புதுடெல்லி: சண்டிகரில் நடந்து முடிந்த மேயர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நான்கு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்றதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரை காலவரையின்றி தள்ளிவைத்தது. தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹ் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை (19-02-24) விசாரணைக்கு வந்தது.
சண்டிகார் நிர்வாகம் சார்பில் சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா, தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் ஆகியோர் நீதிமன்ற விசாரணையில் முன்னிலையாயினர்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “அனில் மசிஹ், நீங்கள் உண்மையான பதிலை அளிக்காவிடில், உங்கள் மீது வழக்குத் தொடர நேரிடும். வாக்குப்பதிவு நடந்த காணொளிக் காட்சியைப் பார்த்தோம். அதில், நீங்கள் வாக்குச் சீட்டுகளில் ‘எக்ஸ்’ என குறியிட்டது ஏன்,” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த அனில் மசிஹ், “நான் மொத்தம் 8 வாக்குச் சீட்டுகளில் ‘எக்ஸ்’ குறியிட்டேன். வாக்குச் சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டியதால்தான் அவ்வாறு செய்தேன்,” என்றார்.
ஆவணங்களில் மட்டுமே கையெழுத்திட வேண்டிய நீங்கள், வாக்குச் சீட்டை சிதைத்தது ஏன்? வாக்குச் சீட்டுகளில் இவ்வாறு குறியிட எந்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் தலைமை நீதிபதி சந்திரசூட்.
வாக்குச் சீட்டுகளைத் தேர்தல் அதிகாரி சிதைக்கும் செயலில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது. நடத்தை விதிகளை மீறி தேர்தலில் தலையீடு செய்ததற்காக அனில் மசிஹ் மீது வழக்கு தொடர்வதற்கு சண்டிகர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
‘சண்டிகர் மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடந்து கொண்டிருப்பது மிக தீவிரமான விஷயம். சண்டிகர் மாநகராட்சியில் புதிதாக தேர்தல் நடத்துவதற்கு பதிலாக. அரசியல் சார்பற்ற புதிய தேர்தல் அதிகாரியை நியமித்து வாக்குகளை எண்ணலாம்.
ஆனால், வாக்குச் சீட்டுகளை ஆராய்ந்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்க முடியும். தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகளை 20ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு ஒப்படைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தது.
தேர்தல் அதிகாரி ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.
இதற்கிடையே, கடந்த 18ஆம் தேதி இரவு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனோஜ் சோன்கர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

