புதுடெல்லி: டெல்லியில் கடத்தல்காரர்களிடம் இருந்து 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றை அழிப்பதற்காக மத்திய நிதி அமைச்சு அளித்த அறிவுறுத்தல் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, டெல்லி காவல்துறையினர் வெவ்வேறு குழுக்களை அமைத்தனர்.
அதன்படி, 2009 முதல் 2013 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் தொடர்புடைய வழக்குகள் பற்றி இந்த குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், டெல்லி ஆளுநர் வி.கே. சக்சேனா முன்னிலையில், போதைப் பொருள்களை அழிக்கும் பணி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) நடந்தது.
கிட்டத்தட்ட 10 டன் (10,631 கிலோ) எடையுள்ள போதைப்பொருள்களை டெல்லியின் ஜஹாங்கீர்புரி நகரருகே தொழிற்சாலை பகுதியில் காவல்துறையினர் தீயிட்டுக் கொளுத்தி அழித்தனர்.
அவற்றில் கஞ்சா, ஹெராயின், கொக்கைன், தோடா போஸ்ட் மற்றும் பிற போதைப்பொருள்களும் அடங்கும். சந்தையில், அவற்றின் மதிப்பு ரூ.1,600 கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.