புதுடெல்லி: அணு எரிசக்தித் துறையில் சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர் (S$35 பில்லியன்) முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுக்க உள்ளதாக அரசுத்தரப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறின.
கரிமத்தை வெளியிடாத மூலப்பொருள்களில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவு தற்போது மொத்த மின் உற்பத்தியில் 2 விழுக்காடாக உள்ளது.
அதனை அதிகரிக்க இந்தியா திட்டமிடுகிறது. அணு எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய தனியார் துறைக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பது இதுவே முதல்முறை.
2030ஆம் ஆண்டுக்குள், நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் புதைபடிவமற்ற எரிபொருளை 50 விழுக்காடு அளவுக்குப் பயன்படுத்த இந்திய அரசாங்கம் இலக்கு கொண்டு உள்ளது.
அந்த இலக்கை எட்ட தனியார் முதலீட்டை அரசாங்கம் நாடுகிறது.
தற்போது அந்த விகிதம் 42 விழுக்காடாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், அதானி பவர், வேதாந்தா உள்ளிட்ட ஐந்து தனியார் நிறுவனங்களுடன் தலா 440 பில்லியன் ரூபாய் (S$7.13 பில்லியன்) முதலீட்டைப் பெற அரசாங்க அதிகாரிகள் பேச்சு நடத்தி வருவதாக, இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்புடைய வட்டாரங்கள் கடந்த வாரம் கூறின.
இருப்பினும், பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை அந்த ஐந்து தனியார் நிறுவனங்களும் அவற்றுடன் பேச்சு நடத்திய அணு ஆற்றல் எரிசக்தித் துறை அதிகாரிகளும் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவிக்கவில்லை.