புதுடெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
இதனால் அவருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணைக்கு முன்னிலையாகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது.
ஆனால் இதுவரை ஆறு முறை அழைப்பாணை அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையாகவில்லை.
எனவே கடந்த 17ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
“எனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணை சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும்,” என கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அமலாக்கத்துறையின் அழைப்பாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் திரும்பத் திரும்ப அழைப்பாணை அனுப்புவதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தின் முடிவுக்காக அமலாக்கத்துறை காத்திருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது 7வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
வருகிற 26ஆம் தேதி நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை அந்த அழைப்பாணையில் தெரிவித்துள்ளது.

